வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவிலுள்ள குகனேசபுரம் பகுதிக்குள் இன்று அதிகாலை காட்டு யானைகள் புகுந்து பெறுமதியான தென்னை மரங்கள், தோட்டப்பயிர்கள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது.
இப்பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன், பெறுமதியான தென்னை, மா, பலா போன்ற மரங்களும் காய்கறிப் பயிர்களும், மரவள்ளி தோட்டம் சேதப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதில் அதிகமான வளர்ந்த தென்னைகள் மற்றும் தோட்டப்பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், சுற்றுவேலியும் சேதமாக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பிரதேசத்தில் வதியும் மக்கள் உயிரச்சுறுத்தலுடன் வாழ்ந்து வருவதுடன், பாரிய நஷ்டங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.
இப்பிரதேசத்திற்குள் நுழையும் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையினால் தொடர்ச்சியாக இவ்வாறான அழிவுகளைத் தவிர்க்க முடியாத சூழ்நிலை காணப்படுவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இதுதொடர்பில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நிரந்தரத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் யானை வேலி அமைத்து தருவதுடன், எங்களது உயிர்களையும், பயிர்களையும் பாதுகாக்க உதவ வேண்டுமென இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, மட்டக்களப்பு